Wednesday, June 10, 2009

அவர் ஒரு சமுத்திரம்

ஒரு நாள் பல பக்தர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அதில் ஒருவராக அமர்ந்திருந்த செல்வந்தர், தன் பத்து விரல் மோதிரம், தங்கச் சங்கிலி, தங்கப் பல் ஆகியனவற்றை அடிக்கடி காட்டி தன் செல்வக் கொழிப்பைக் காட்டிக்கொண்டிருந்தார். அவர் யாரென வாரியார் கேட்டதற்கு ஊர் மக்கள், அவர்தான் இந்த ஊரிலேயே மிகுந்த செல்வந்தர் என்றனர்.
அன்றிரவு வாரியாரிடம் வந்த செல்வந்தர்,"சுவாமி, நாளைக்கு என்னைப் புகழ்ந்து எல்லோரிடமும் சொல்லுங்கள்" என்று சொல்லிச் சென்றார். அடுத்த நாள் வழக்கம்போல் சபை கூடியதும், வாரியார்,"இவர் யார் தெரியுமா? இவர் ஒரு பெரிய சமுத்திரம். அள்ள அள்ளக் குறையாத கடல். இவ்வூரிலேயே மிகப் பெரிய செல்வந்தர். சமுத்திரம்ன்னா.. சமுத்திரம்தான். ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை" என்றார். செல்வந்தருக்கு உச்சி குளிர்ந்து விட்டது. பாராட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாரியாரிடம் விடைபெற்றுச் சென்று விட்டார்.
பக்தர்களில் ஒருவர் தயக்கத்துடன் எழுந்து, "சாமி! நீங்க இப்படிப் பொய்யாகப் பாராட்டலாமா? அந்த ஆள் ஒரு வடிகட்டிய கஞ்சன். ஒரு நல்ல காரியத்துக்கும் உதவியது இல்லையே?" என்று கேட்டார்.
அதற்கு வாரியார், "அதைத்தானே நானும் சொன்னேன். புரியவில்லையா? சமுத்திரம் ரொம்பப் பெரிசு. ஏகப்பட்ட தண்ணீ இருக்கு. ஒரு வாய் தண்ணி ஒருத்தருக்காவது பயன்படுமா? யார் தாகத்தையாவது தீர்க்குமா? இந்த ஆளிடமும் சமுத்திரம் மாதிரி செல்வம் கொட்டிக் கிடக்கு. ஒருத்தருக்கும் பயன்பட்டதில்லை. புரிந்ததா?" என்றார்.
சமுத்திரம்போல் இருக்காதே! ஒரு குளத்தைப்போல் இரு!

1 comment: