வாழ்க்கை
நினைத்தது போல் அழகாக இல்லை
வானவில்லின் நிறங்களைப்போல
கைகளுக்கு அகப்படாமல்
சிறகடித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளைப்போல்
வாழ்க்கை ஒன்றும் அழகாக இல்லை
அருவருப்பான மண் புழுவைப் போல்
சொத சொதவென நாட்கள் நகர்கின்றது
அடுப்படியில் படுத்துறங்கிய பூனை
சோம்பல் முறித்தெழுவதைப்போல்
சமயத்தில் வரும் உற்சாகம்
நகரத்தின் சந்தடியில்
அடிபட்டுப் போய் விடுகிறது
முகவரியிட்ட கடிதங்களை
தபால் பெட்டியில்
சேர்த்து விட்டு காத்திருக்கும்
நம்பிக்கைகள்கூட இல்லை
உலகப் புகழ்பெற்ற
நயாகரா வீழ்ச்சியை பார்ப்பதற்கும்;
கடிதங்களை எழுதவும் மட்டுமல்ல
ஒரு தலையசைப்புக்குக்கூட
சிறு அவகாசம் இல்லை.
நட்பு முத்திரைகள் சேர்க்கவும்
முத்தமிடவும்தான்
உறவுகளை இழந்த மனத்தவிப்பு
மட்டும் எஞ்சியிருக்கிறது
சொல்வதற்கு என்ன இருக்கிறது?
அம்மா
பூக்களைப் பார்க்கின்ற போதும்
புன்சிரிக்க முடிவதில்லை.
இருந்தும் நம்பிக்கை மட்டும்
இதயத்தில் எட்டி பார்ப்பதால்
தொடர்கிறது வாழ்க்கை
No comments:
Post a Comment