Monday, March 16, 2009

மணலில் எழுதிய எழுத்து

இணைபிரியாத நண்பர்கள் இருவர் பாலைவனம் வழியாக நடந்து சென்றனர். இருவரும் பயணத்தின் ஊடே பேசிக்கொண்டே சென்றனர். வாக்குவாதம் பலமாக இருந்தது. வாதம் மிக தீவிரமாகச் சென்றது. ஒரு நண்பனானவர் அடுத்தவனின் கன்னத்தில் அடித்து விட்டான்.வாக்குவாதத்தின் விளைவுதான் இதற்குக் காரணம்.

அடி வாங்கியவனுக்கு வலித்தது. அவன் மனம் துடித்தது. இருப்பினும் அவன் எதையும் சொல்லாமல் மவுனமாக அந்தப் பாலைவனப் பாதையின் மணலில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது கன்னத்தின் அடித்துவிட்டான்”.

அதன்பிறகு எதுவுமே பேசாமல் மேலும் வெகுதொலைவு நடந்து சென்றனர். அங்கே ஒரு பாலைவனச்சோலை (oasis) காணப்பட்டது. அந்தப் பாலைவனச்சோலையில் குளிக்கலாமென இருவரும் முடிவெடுத்தனர். குளித்தனர். திடீரென்று கன்னத்தில் அடிவாங்கிய நண்பனானவன் நீரில் மூழ்கிவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனால் சற்றுமுன் அவனை அடித்த நண்பன் இவனைக் காப்பாற்றிவிட்டான்.


உயிர்போகி உயிர் வந்தது நீரில் மூழ்கிப் பிழைத்தவனுக்கு. பிறகு அவன் அந்த நீர்க்கரையில் இருந்த ஒரு பாறையில் எழுதினான் - “இன்று என்னுடைய இனிய நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்”.

அவனைக் கன்னத்தில் அடித்தவனும், நீரில் இருந்து காப்பாற்றியவனும் கேட்டான் - “நான் உன்னை அடித்தவுடன் அந்த நிகழ்ச்சியை நீ மணலில் எழுதினாய். ஆனால் உன் உயிரைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை பாறையில் எழுதிவிட்டாயே?”.

உயிர்பிழைத்தவனும் அடிவாங்கியவனுமாகிய நண்பன் சொன்னான் - “யாராவது நமது மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டால் நாம் அதை மனதில் எழுதிக்கொள்ளக் கூடாது. மணலில்தான் எழுத வேண்டும். மன்னிப்பு என்கிற காற்றானது மணலில் எழுதியவற்றை அழித்துவிடும்”.

“ஆனால் யாராவது நமக்கு உண்மையிலேயே நன்மை செய்திருந்தால் அதை மனம் என்கிற கல்லில்தான் எழுத வேண்டும். காற்று அதை எக்காலத்திலும் அழித்து விடாது. அப்போதுதான் பிறர் செய்த நன்மையானது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.”

நீதி : உங்களிடம் உள்ள செல்வங்களால் உங்கள் மதிப்பு எடை போடப்படுவது இல்லை. உங்களுக்கு உதவ முன்வருபவர்களைக் கொண்டே உங்களுடைய மதிப்பு எடை போடப்படும்.

1 comment:

  1. எப்பொழுது கேட்டாலும் புதிதாய் தோன்றும் கதை.

    ReplyDelete