Tuesday, March 17, 2009

நம்பிக்கை :முயற்சி = மரணம்

ஒரு ஊரில் மழைபெய்து கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எல்லோரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி உயிர்பிழைத்தல் பொருட்டு - ஊரைவிட்டுச் சென்றனர்.

ஒருவன் மட்டும் தெளிவாகச் சொன்னான் - "எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் என்னைக் கண்டிப்பாகக் காபபாற்றுவார். அதனால் நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறி ஊரைவிட்டு வெளியே கிளம்ப மறுத்தார். ஊரெங்கும் பண்பலை வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வெள்ள எச்சரிக்கைகள் வந்த வண்ணமே இருந்தன.

மக்கள் அச்சப்பட்டு கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறினர். அந்த ஒருவன் மட்டும் ஊரைவிட்டு வர மறுத்தான். மழை தொடர்ந்து பெய்தது. ஒரு ஜீப் வண்டியில் மீட்புக்குழுவினர் வந்து அவனைப் பார்த்து, 'வண்டியில் ஏறிக்கொள் உயிரைக் காத்துக்கொள்" என்றனர்.

இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான். அடாது மழை விடாது பெய்தது, ஊரில் இவன் மட்டும் தான் இருந்தான். இப்பொது இவனது மார்பு அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மீட்புக்குழுவினர் படகில் வந்தனர். இவனருகில் வந்து 'தயவு செய்து படகில் ஏறிக்கொள். உயிரைக்காத்துக்கொள்", என்றனர்.

இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான். இப்பொழுது வெள்ளநீர் இவனது தோள்பட்டையைத்தாண்டிக் கொண்டிருந்தது.

இறுதிக்கட்ட மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 'எலிகாப்டர்' ஒன்று இவனை வட்டமிட்டு செய்திகூறியது.'தயவு செய்து எலிகாப்டரில் ஏறிக்கொள். உயிரைக்காத்துக்கொள்", என்று செய்தி தெரிவித்தது. இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான்.

இடி மின்னலுடன் மழை பிரளயமாக உருவெடுத்தது. இவன் நீர்ரில் முழுவதும் மூழ்கி இறந்தான். விண்ணுலகம் சென்றான். அங்கே கடவுளுடன் தர்க்கம் செய்தான்.

"இவ்வளவு பெரிய வெள்ளத்தில் எல்லோரும் சுயநலமாக கடவுளாகிய உன்னைப் பற்றிக் கருதாமல் வேறு ஊருக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். நான் ஒருவன் மட்டும் தான் உன்னை நினைத்து உருகி வேறிடம் செல்லாமல் கடவுள் காப்பாற்றுவார் - என்ற ஒரே எண்ணத்தில் இலயித்து இருந்தேன். ஆனால் நீயோ என்னைக் கைவிட்டுவிட்டாயே..இது முறையா?" என்றான்.

கடவுள் சொன்னார் -"அப்படியென்றால் ஜீப், படகு, எலிகாப்டர் - இவற்றை அனுப்பிவைத்து உன்னைக் காப்பாற்ற முயன்றது யார். நான்தானே. நீ என் மீது வெறும் நம்பிக்கை மட்டும்தான் வைத்து இருந்தாய். ஆனால் உயிர்பிழைப்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மீட்புக்குழுவை உன் பொருட்டு அனுப்பியது நான். ஆனால் நீ ஒரு சிறு முயற்சிகூட எடுக்காமல் உயிரிழந்தாய்", என்றார்.

நீதி : முயற்சியுடன் கூடிய நம்பிக்கையே வெற்றி தரும்

No comments:

Post a Comment