Wednesday, April 15, 2009

மீண்டும் என் வானம் தொட....

எனக்கென்று ஒரு வானம்,
துரோகங்களின் நிழல்கள் படியாமல்...
அங்கு, என்
விண்மீன்களை நாற்றுகளாக்கி,
விளைநிலங்களில்
வெண்ணிலாக்களை ஊடுபயிராக்கியிருந்தேன்...
வானம் தொட்டுப்பறந்த
பறவையின் சிறகுகளில்
கொஞ்சம் சிக்கி
அதன் எச்சங்களில்
கொஞ்சம் பூமி பார்த்தேன்....
கோடை மழை நேரங்களில்
பூக்களுக்குள் வந்திறங்கி
புது உறவு கண்டிருந்தேன்...
அவ்வப்பொழுது
மின்னல் கீற்றுகளை அருவிகளாக்கி,
மலைகளை மாலைகளாக்க
வார்த்தைகளைக் கொஞ்சம் வழியவிட்டேன்...
கவிதை அமைந்தது...
சாகாவரம் பெற்ற கவிதைகளனைத்தும்
இப்பொழுது,
மரங்களாகி நிற்கிறது
மீண்டும் என் வானம் தொட....

No comments:

Post a Comment